நாக்கை பிரளவைக்கும்  நாட்டுக்கோழி குழம்பு ரெடி..!!

0
751
chicken
chicken

தேவையான பொருள்கள்:
நாட்டுக்கோழி – 1/2 கிலோ
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
தயிர் – 2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிது
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து திரிக்க –
மிளகாய் வத்தல் -5
கொத்தமல்லி – 5 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
மிளகு – 1 மேஜைக்கரண்டி
வறுத்து அரைக்க –
தேங்காய் துருவல் – 100 கிராம்

தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
பட்டை – 1 இன்ச் அளவு
கிராம்பு – 2
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
முதலில் கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.

தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், திரித்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.

மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.